தினமலர் 19.04.2010
மாநகராட்சி இடத்தில் வேலி போட முயற்சி: முற்றுகையால் பரபரப்பு
சேலம்: நடுநிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து முள்வேலி அமைக்க முயன்றனர். அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்ட நம்பர் இரண்டு புதுத்தெரு பகுதியில், சுமார் 30 ஆயிரம் சதுரஅடி இடம் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் நடுநிலைப்பள்ளி கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தில், பள்ளி கட்ட 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட மாநகராட்சி இடத்தில், நேற்று காலை முள்வேலி அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டனர். இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்வேலி அமைக்க வந்தவர்களை சிறை பிடித்த பொதுமக்கள், அம்மாபேட்டை போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் எஸ்.ஐ., குமரேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் வந்து, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.