தினமலர் 21.04.2010
கட்டுமானப் பணிகள் இடிப்பு: ஊட்டி நகராட்சியினர் அதிரடி
ஊட்டி: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதியில்லாமல் அமைக்கப்பட இருந்த பொழுது போக்கு பூங்காவின் கட்டுமானப் பணிகளை நகராட்சியினர் இடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், அரசின் விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், குடியிருப்புகளை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் படி, ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,337 கட்டடங்களை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது; ஆனால், பல காரணங்களால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டன. தற்போது, இடிப்பு பணிகளை தொடர நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்புகளை துண்டிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கோடை சீசனை முன்னிட்டு கேளிக்கை பூங்காக்கள் திடீரென முளைக்க துவங்கியுள்ளன. ஊட்டி வேலிவியூ பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடந்தன; கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தற்காலிக கட்டடம் கட்டப்பட்டது. இதையறிந்த நகராட்சியினர், அப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடடத்தை இடித்தனர். மேலும், ஊட்டி படகு இல்லத்துக்கு அருகே தீம் பார்க் அமைக்க நடந்த ஆயத்தப் பணிகளையும் தடுத்தனர்.