தினமலர் 22.04.2010
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்:தஞ்சை நகராட்சிஆணையர் தகவல்
தஞ்சாவூர்:தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு களும் அகற்றப்படும் என்று தஞ்சை நகராட்சி ஆணையர் நடராஜன் தெரிவித்து உள்ளார்.தஞ்சையில் திருவையாறு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. நகராட்சி ஆணையர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.இதுகுறித்து நகராட்சி ஆணையர் நடராஜன் அளித்த பேட்டி:தஞ்சையில் திருவையாறு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கலெக்டரின் நலத்திட்ட நிதியுதவியுடன் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. அதில் கடந்த சில நாட்களாக பூத்தொட்டிகள் வைக்கப் பட்டதுடன், டீக்கடை கழிவுநீரும் தேங்கியது.இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதேபோல் தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் தொடர்ந்து அகற்றுவோம்.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு ஆணையர் நடராஜன் கூறினார். நகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.