தினமணி 23.07.2009
பவானி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பவானி, ஜூலை 22: பவானி புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.
பவானி பஸ் நிலையத்தில் கடை வைத்திருப்போர் தங்களது கடைகளுக்கு முன்பாக நடைபாதையில் பயணிகள் காத்திருக்கும் இடங்களில் மாம்பழம் மற்றும் பழங்களைக் குவித்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் நிற்கக் கூட இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நகராட்சி ஆணையர் முத்துக்கண்ணு தலைமையில் சுகாதார ஆய்வாளர் பேச்சிமுத்து மற்றும் அதிகாரிகள் நடைபாதையில் தங்களது கடைகளுக்கு முன்பாக வியாபாரத்துக்கு வைத்திருந்த பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு மேல் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் பொருள்களை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.