தினமணி 24.04.2010
நந்தனத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: 8 ஆயிரம் சதுர அடி நிலம் மீட்பு
சென்னை,ஏப்.23:நந்தனத்தில் 16 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, ரூ. 10 கோடி மதிப்பிலான 8 ஆயிரம் சதுர அடி நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
சென்னை நந்தனத்தில் அண்ணா சாலை, கால்நடை மருத்துவமனை சாலை சந்திப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் 16 கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது, மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. சைக்கிள் கடை, வெற்றிலை கடை, டீ கடை, வெல்டிங் கடை என 16 கடைகள் ஆக்கிரமித்திருந்தன.
மேயர் மா. சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இரண்டு ஜே.சி.பி. இயந்திரங்கள் மற்றும் 20 மாநகராட்சி ஊழியர்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ. 10 கோடி மதிப்பிலான 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.