தினமலர் 26.04.2010
ஆக்கிரமித்த' பேனர்கள் அகற்றம்
திருவண்ணாமலை: தி.மலை நகரில் நாள் கணக்கில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.திருவண்ணாமலை நகரில் பல இடங்களில் வாரக்கணக்கில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. மேலும், வியாபார நிறுவனங்களுக்கு இடையூறாகவும் வைக்கப்படுவதால், நகரில் திரும்பிய பக்கம் எல்லாம் பேனர்கள்மயமாகவே காட்சி அளிக்கிறது. ஆனாலும், இவற்றை அகற்ற போலீஸ் மற்றும் நகராட்சி துறையினர் ஏனோ தயக்கம் காட்டி வருகின்றனர்.இதனால், அனுமதி பெற்ற பேனர்களை வைப்பதற்கு கூட நகரில் இடம் கிடைப்பது இல்லை. நகரின் புறம்போக்கு இடங்களையும் சிலர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தாங்கள் மட்டும்தான் பேனர் வைக்க வேண்டும். மற்ற யாரும் வைக்க கூடாது என்று அடாவடி செய்வதும் தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக பேனர்களை அகற்ற கலெக்டர் ராஜேந்திரன் உத்தரவிட் டார். இதைத்தொடர்ந்து தி.மலை ஆர்.டி.ஓ. பத்மா, தாசில்தார் சுப்ரமணி, நகராட்சி கமிஷனர் சேகர், இன்ஜினியர் சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று நகரில் உள்ள பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதன்படி, திருவண்ணாமலை பஸ்நிலையம், தேரடித்தெரு, அண்ணாதுரை சிலை, கிரிவலப்பாதை, பெரிய தெரு உட்பட நகரின் பல இடங்களில் வாரக்கணக்கில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.