தினமலர் 29.04.2010
முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் பகுதி ஆக்கிரமிப்புகளை மே இரண்டாம் தேதிக்குள் அகற்ற கெடு விதிக்கப்பட்டு தண்டோரா மூலம் அறிவிக்கபட்டுள்ளது. மாவட்டத்தில் ரோட்டோரம், பஜார் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதுகுளத்தூரில் கடந்த மார்ச்சில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் அகற்றப்பட்ட சில நாட்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு துவங்கியது. இதனிடையே , ''ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா ,'' என, அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை பெற்றது. முதுகுளத்தூர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அமைக்கும் பணி ஜரூராக துவங்கி உள்ளது. இதை தொடர்ந்து அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மே இரண்டாம் தேதிக்குள் அகற்ற வேண்டும் எனவும், பேரூராட்சி சார்பில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.