தினமணி 24.07.2009
உடுமலை நகரில் நாளை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உடுமலை, ஜூலை 23: உடுமலை நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை சனிக்கிழமை (ஜூலை 25) அகற்ற நகராட்சி முடிவு செய்துள்ளது.
நகரின் முக்கிய சாலைகளான ராஜேந்திரா சாலை, கல்பனா சாலை, வஉசி வீதி, சத்திரம் வீதி, வெங்கடகிருஷ்ணா ரோடு ஆகிய சாலைகளில் தாற்காலிக கடைகளின் ஆக்கிரமிப்புகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
மத்திய மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிகளில் ஏராளமான சாலையோரக் கடைகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி, அவ்வப்போது ஏற்படும் விபத்தால் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஏராளமான புகார்களை அனுப்பியதால் நகராட்சி நிர்வாகம் தற்போது இதன்மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதையொட்டி சனிக்கிழமை உடுமலை நகரில் ஆக்கிரமிப்புகளை போலீசார் உதவியுடன் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உடுமலை நகரமைப்பு அலுவலர் இளங்கோவன் வியாழக்கிழமை கூறியது: ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் காலை 8 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முக்கிய வீதிகளில் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.