தினமலர் 03.05.2010
இணைப்பு சாலை அமைக்க ஆக்கிரமிப்பு அகற்றம்
கோவை : பாப்பநாயக்கன் பாளையத்திலிருந்து நவ இந்தியா வரை செல்லும் இணைப்பு சாலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நகரமைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்காள் லே-அவுட் பகுதியிலிருந்து நவ இந்தியா வரையிலான இணைப்பு சாலைக்கு உள்ளூர் திட்டக்குழுமம் நிதி ஒதுக்கியுள்ளது. இதை தொடர்ந்து பணிகளை துவக்கி விரைவாக நிறைவு செய்ய திட்டமிட்டு கோவை மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நேற்று துவக்கினர். முதற்கட்டமாக பாப்பநாயக்கன்பாளையம் மின்சார எரியூட்டு மையத்திற்கு அருகிலுள்ள கருப்பக்காள் லே - அவுட் பகுதியிலிருந்து நவ இந்தியா செல்லும் பாதையில், இணைப்பு சாலை அமைக்கும் பகுதிக்கு இடையூறாக இருந்த எல்லை கருப்பராயன் கோவிலை மாநகராட்சி நகரமைப்புத்துறையினர் அப் புறப்படுத்தினர்.
இதையடுத்து அப்பகுதியில் ரோட்டின் இரு பகுதியிலுமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கருப்பக்காள் லே - அவுட் பகுதியிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்கு இரு பகுதியிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.