Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் அடுத்தகட்டமாக பல்லடம் ரோடு

Print PDF

தினமலர் 04.05.2010

தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம் அடுத்தகட்டமாக பல்லடம் ரோடு

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அடுத்தகட்டமாக, பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூரின் பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி ரோட்டில் இரு மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த ஏப்., 28ல் இருந்து திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வத்சலா வித்யானந்தி மற்றும் உதவி பொறியாளர் பாலாமணி தலைமையில், சாலை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர். விதிமுறையை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், சாக்கடை கால்வாய் மீது அமைக்கப்பட்ட கட்டுமான பணிகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள், தட்டிகளும் பறிமுதல் செய்து, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான லாரியில் அள்ளிச்செல்லப்பட்டன. தாராபுரம் ரோடு செட்டிபாளையத்தில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் சிக்னல் வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி சர்வே துறையினர், நில அளவைப் பணியில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ் சாலைத்துறையினருக்கு உதவி செய்தனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'பிரதான ரோடுகள் அனைத்திலும் ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப் படும். தாராபுரம் ரோட்டில் முதல் கட்டப்பணி நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக, பல்லடம் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற் றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் படும்,' என்றனர

Last Updated on Tuesday, 04 May 2010 06:11