தினகரன் 15.12.2010
ரூ10 கோடி மதிப்பு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பெங்களூர், டிச. 15: மாநகரின் பீனியா தொழில்பேட்டை அடுத்த சொக்கசந்திரா பகுதியில் பி.டி.ஏவுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்த 17 வீடு, 28 வணிக வளாகங்கள் கட்டப்பட்டிருந்தது. இது பி.டி.ஏ. நிலம் என்று கூறி காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்தும் காலி செய்யவில்லை. போலீயாக ஆவணம் தயாரித்து பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை நேற்று காலை போலீசார் உதவியுடன் சென்ற பி.டி.ஏ. அதிகாரிகள், ஜே.சி.பி. வாகனம் மூலம் வீடு மற்றும் வணிக வளாகங்களை இடித்து தரைமட்டமாக்கி ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டனர்.
அதேபோல் ஜெயநகர் 5வது பிளாக்கில் பெட்ரோல் பங்கு அமைப்பதற்காக ஹிந்துதாஸ் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு கடந்த 1997ல் 8 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்பந்த அடிப்படையில் மாநகராட்சி வழங்கியது. இதன் குத்தகை காலம் முடிந்தும் நிலத்தை காலி செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை மாநகராட்சி ஊழியர்களுடன் சென்ற அதிகாரிகள், ரூ10 கோடி மதிப்புள்ள 8 ஆயிரம் சதுர அடி நிலத்தை மீட்டனர்.