தினகரன் 26.11.2010
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கட் அவுட், பேனர் அகற்றம்
கோவை, நவ.26: கோவை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கட் அவுட், பேனர், விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.
கோவை நகரில் பிரதான ரோடு, குறுக்கு சந்து உட்பட பல்வேறு பகுதியில் கட் அவுட், பேனர், விளம்பர பலகைகள் அதிகமாக இருப்பதாக புகார் வந்தது. கோ வை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் (தெற்கு) லட்சுமணன், உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சுங்கம், திருச்சி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் கட் அவுட், பேனர், போஸ்டர்களை அகற்றினர். அவிநாசி ரோட்டில் பீளமேடு, ஹோப் காலேஜ், அண்ணாசிலை, சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ரேஸ்கோர்ஸ், ரெட்பீல்டு, மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை மேம்பாலம், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், காந்திபுரம், ரயில் நிலையம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று 500க்கும் மேற்பட்ட பேனர், கட் அவுட், போஸ்டர் அகற்றப்பட்டது. ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக, சிக்னல், நடைபாதைக்கு தடை ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைக்க கூடாது என எச்சரிக்கப்பட்டது. கட் அவுட், பேனர் அகற்ற அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கட் அவுட், பேனர்களை வைக்க அனுமதிக்கவில்லை. கட்சியினரிடம் பேனர், கட் அவுட் ஒப்படைக்க மறுத்து விட்டனர்.