தினகரன் 11.11.2010
ஆக்கிரமிப்பு அகற்றம் துவங்கியது
மதுரை, நவ. 11: மதுரை நகர் முழுவதும் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்ற மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். பெரியார் பஸ்நிலைய சுற்றுப்பகுதி மற்றும் மேலவெளி வீதி, வடக்கு வெளிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மதுரை நகரின் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப் புகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் உத்தரவிட்டார். இதன்படி நேற்று நடவடிக்கை ஆரம்பமானது.
பெரியார் பஸ் நிலையத்தின் சுற்றுப்பகுதி, கட்டபொம்மன் சிலை சுற்றுப்பகுதி, மேலவெளிவீதி, வடக்கு வெளிவீதி, சிம்மக்கல், யானைக்கல், வக்கீல் புதுத்தெரு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
போக்குவரத்துக்கு இடையூறான அனுமதியற்ற விளம்பர போர்டுகள், கடை முன் அமைக்கப்பட்டு இருந்த கொட்டகைகள், சாலை ஓர கடைகள் அகற்றப்பட்டன. ரூ.1லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை தொடரும் என ஆணையாளர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு வீதிகளின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறு நீங்கியது.
கால்வாய் அடைப்புகள் நீக்கம்
கழிவுநீர் கால்வாய் மற்றும் வடிகால்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க அடைப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. பெரியார் பஸ்நிலையம், ரயில் நிலைய முன்பகுதி, கோரிப்பாளையம் தேவர்சிலை மற்றும் ராஜாஜி மருத்துவமனை பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க வடிகால்களில் அடைபட்டு இருந்த மண் மற்றும் கழிவுகள் வெளியேற்றப்பட்டன.