தினமலர் 22.09.2010
கட்சி கொடிகள் நட்டு நகராட்சி நிலம் ஆக்கிரமிப்பு : அதிகாரிகளுக்கு கெடு
மேட்டூர்: காலி நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக பொதுமக்கள் நட்டு வைத்த கொடிகம்பங்களை, மேட்டூர் நகராட்சி அதிகாரிகளுக்கு கெடு விதித்து அப்பகுதி மக்கள் அகற்றினர்.மேட்டூர் 15வது வார்டில் நகராட்சி ஆய்வு மாளிகை உள்ளது. அதன் அருகே நகராட்சிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் காலி நிலம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது.நேற்றுமுன்தினம் அப்பகுதி பொதுமக்கள் தாங்கள் சார்ந்துள்ள தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி.,- அ.தி.மு.க., கட்சிகளின் கொடிகளை ஆங்காங்கே நட்டு வைத்து காலி நிலத்தை போட்டி போட்டு ஆக்கிரமித்தனர். தகவல் அறிந்த மேட்டூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சந்திரசேகரன் காலி நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள கொடிகம்பங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் தனசேகரன், நகர அமைப்பு ஆய்வர் திலகவதி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.மேட்டூர் 15வது வார்டு கழிப்பிடம் அருகே தனிநபர் ஒருவர் காலி நிலத்தை ஆக்கிரமித்து குடிசை போட்டுள்ளார். அந்த குடிசைகளை அகற்ற வேண்டும். ஆய்வு மாளிகை அருகிலுள்ள காலி நிலத்தை பலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவற்றை அகற்றினால் மட்டுமே கட்சி கொடிகளை அகற்றுவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே, முதல்கட்டமாக 15வது வார்டில் ஆறுமுகம் என்பவர் நகராட்சி நிலத்தை ஆக்ரமிப்பு செய்து கட்டிய குடிசையை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். விரைவில் மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.அததூ தொடர்ந்து விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் மீண்டும் கட்சி கொடிகளை நட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோம் என நகராட்சி அதிகாரிகளுக்கு கெடு விதித்து அப்பகுதி பொதுமக்கள் தாங்கள் நட்டு வைத்த கொடிகளை அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.