தினகரன் 26.08.2010
நில மாபியாக்களுக்கு பயப்படாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன்
பெங்களூர், ஆக.26: பெங்களூர் மாநகரில் செயல்படும் நில மாபியாகளுக்கு பயப்படாமல் நில பாதுகாப்பு கொள்கையை செயல்படுத்துவேன் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார். மேயர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நில பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் மேயர் கூறியதாவது: மாநகரில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமித்துள்ளது குறித்து நடத்திய ஆய்வில் மாநகரின் தெற்கு மண்டலத்தில் 40, மேற்கு மண்டலத்தில் 98, கிழக்கு மண்டலத்தில் 62 என்ற வகையில் சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பின்னி மில் பக்கத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் வைத்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய நிலத்தை அந்த நபர் இன்னொருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த நிலத்தை மாநகராட்சிக்கு திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான நிலம், கட்டிடம் ஆகியவை யார் யாரிடத்தில் உள்ளது என்ற ஆய்வு பணி நாளை (இன்று) முதல் நடத்தப்படும். சில நில மாபியாக்கள் அரசு சொத்தை ஆக்ரமித்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நில மாபியாகளுக்கு அஞ்சாமல் சொத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி முதல்வர் அளிப்பார் என்றார்.