தினகரன் 30.06.2010
நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்த 9 கிரவுண்டு நிலம் மீட்பு
சென்னை, ஜூன் 30: நுங்கம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டல் ஆக்கிரமித்திருந்த இடத்தை மாநகராட்சி நேற்று கையகப்படுத்தியது.
நுங்கம்பாக்கத்தில் அண்ணா மேம்பாலம் அருகில் ‘தி பார்க்’ நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் வளாகத்தின் அருகிலேயே திறந்தவெளி இடம் (ஓ.எஸ்.ஆர். நிலம்) பொது பயன்பாட்டிற்காக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை ஓட்டல் நிர்வாகமே ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
இதை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவு பெற்றது. இந்த தடையை நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி மனுதாக்கல் செய்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவரை இடிக்க மாநகராட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மாலை அந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்று அங்கு பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுற்றுசுவரை இடிக்கும் பணியை மேற்கொண்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள சுமார் 9 கிரவுண்டு திறந்தவெளி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர்.