தினகரன் 17.06.2010
அரூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
அரூர், ஜுன் 17: அரூர் பேரூராட்சியில் அரசு சொந்தமான இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அரூர் அம்பேத்கார் நகர் உட்பட பல பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களை கட்டியிருந்தனர். போக்குவரத்துக்கு இடையூராக உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்த ஆட்சியர் அமுதா, ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் நேற்று அகற்றப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அரூரில் இருந்து பொய்யப்பட்டி வரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துள்ளோம். இந்த பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறினர். நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் கோவிந்தசாமி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் உட்பட கலந்து கொண்டனர். பாதுகாப்பு மற்றும் ஆயத்தப்பணிகளை காவல்துறையினர், பேரூராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் செய்தனர்.