Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இடையூறு டிஜிட்டல் போர்டுகள் அகற்றம்

Print PDF

தினமலர்     20.05.2010

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இடையூறு டிஜிட்டல் போர்டுகள் அகற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நேற்று போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்பட்டது. இன்றும் இந்த அதிரடி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலும், யூனியன் பகுதியிலும் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டும், மாநகராட்சி மற்றும் யூனியனில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் போர்டுகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபாலன் அறிவுரையின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர்கள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் குத்தாலிங்கம் மற்றும் மாநகராட்சி சுகாதாரபிரிவினர் போலீசார் பாதுகாப்புடன் டிஜிட்டல் போர்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் துவங்கிய டிஜிட்டல் போர்டு அகற்றும் பணி பீச் ரோடு வரை நடந்தது. நேற்று மதியம் 3 மணி வரை மொத்தம் அனுமதி பெறாமல், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள 50 போர்டுகள் வரை அகற்றப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அகற்றப்பட்ட டிஜிட்டல் போர்டுகள் மாநகராட்சி லாரியில் அள்ளி எடுத்து செல்லப்பட்டன. நேற்று மாலை வரை இந்த பணிகள் நடந்தது. இன்றும் டிஜிட்டல் போர்டுகள் அகற்றும் பணி தொடர்கிறது.

 

கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலைய பகுதியில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு

Print PDF

தினகரன்     18.05.2010

கீழ்ப்பாக்கம் குடிநீர் நிலைய பகுதியில் ரூ.1000 கோடி நிலம் மீட்பு

சென்னை, மே 19: "கீழ்ப்பாக்கம் குடிநீர் வழங்கும் நீர் நிலைய பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ரூ.1,000 கோடி மதிப்புள்ள 21 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது" என மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவல்லிக்கேணி, வல்லப அக்ரஹாரம் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:

சென்னையில் பருவ மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் மழைநீர் தேக்கத்தை தடுக்க மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை இணைந்து மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கவுள்ளது. இதற்காக சென்னையை நில அளவை செய்து, 4 நீர்த்தேக்க பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1,447.91 கோடி செலவில் இந்த பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

வேளச்சேரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் 32.60 கி.மீ. நீளத்திற்கு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.47.52 கோடி செலவிடப்படுகிறது. கொளத்தூர் நீர்பிடிப்பு பகுதியிலும், வடக்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியிலும் 33.06 கி.மீ. நீளத்திற்கு ரூ.46.03 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியான திருவல்லிக்கேணியில் பிரதான கால்வாய்கள், துணைக் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்படுகிறது. இது தவிர மத்திய பக்கிங்காம் கால்வாயை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி, கான்கிரீட் தரை மற்றும் வேலி அமைக்கும் பணி பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளுக்காக ரூ.115.74 கோடி செலவிடப்படுகிறது.

கீழ்ப்பாக்கம் நீர் நிலையத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.51 கோடி செலவில் மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டிகள் கட்டப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மீது அதிக அளவில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதன் மூலம் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சுமார் 21 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இது சென்னை மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சாதனையாகும். இவ்வாறு மேயர் பேசினார். மேயர் தகவல் .

 

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

Print PDF

தினகரன்     18.05.2010

அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி, மே 18: தூத்துக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள் நாளை முதல் அகற்றப்படும் என்று கலெக்டர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரில் அனுமதிக்கப்படாத இடங்களிலும் விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பழைய பஸ் நிலையம், காய்கனி மார்க்கெட், பாளைரோடு உள்ளிட்ட இடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வாகனங்களில் செல் வோர் விபத்தில் சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. போக்குவரத்து, மாநகர விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள போர்டுகளை அகற்ற வேண்டும் என்று நடுநிலையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

தூத்துக்குடி கலெக்டர் பிரகாஷ் அனுமதிக்கப்படாத இடங்களில் வைக்கப்பட் டுள்ள அனைத்து விளம்பர போர்டுகளை யும் நாளை (19ம் தேதி) முதல் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாநகரம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், விளம்பர பலகைகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதனை தவிர்க்க மாநகராட்சி பகுதிகளிலும், ஒன்றிய பகுதிகளிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள், விளம்பர போர்டுகளை இன்று மாலைக்குள் அகற்ற வேண்டும்.

இல்லையேல் நாளை முதல் மாநகராட்சி அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோர் இந்த போர்டுகளை அகற்றுவார்கள். இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட நபர்களிடம் வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி டிஜிட்டல் போர்டுகள் வைப்பவர்கள் அதில் மாநகராட்சி வழங்கிய அனுமதி எண் மற்றும் அனுமதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டே வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 107 of 204