தினமணி 03.05.2010
பழைய பஸ்நிலையம் அருகே விநாயகர் கோயில் இடிப்பு
திருப்பூர், மே 2: சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, திருப்பூர் பழைய பஸ்நிலையம் முன்பு கட்டப்பட்டிருந்த சுந்தர விநாயகர் கோயிலை மாநகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர்.
பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்க, திருப்பூர் மாநகரிலுள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அவிநாசி சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, பல்லடம் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பழைய பஸ்நிலையத்தை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன.
அதன்படி, காமராஜர் சாலையிலுள்ள மாநகராட்சி கடைகள், செல்வவிநாயகர் கோயில் மற்றும் பழைய பஸ்நிலையம் முன்புள்ள சுந்தர விநாயகர் கோயில் ஆகியவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டு கடந்த பிப். 9-ம் தேதி பணிகள் துவங்கப்பட்டன. முதற்கட்டமாக அங்கிருந்த செல்வவிநாயகர் கோயில் இடித்து அகற்றப்பட்டது.
தொடர்ந்து, பழைய பஸ்நிலையம் முன்புள்ள சுந்தர விநாயகர் கோயிலையும் இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக கோயிலில் இருந்த சாமிசிலையை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிப்ரவரி இறுதியில் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கோயிலை இடிக்கும் பணி கைவிடப்பட்டது. பிறகு அக்கோயிலுக்கு வேறு இடம் ஒதுக்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. அக்கோயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை காலை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில், காலை 6 முதல் 9 மணி வரை இக்கோயில் இடிப்பு பணி நடந்து முடிந்தது. பாதுகாப்புக்காக டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர்.