தினமணி 21.04.2010
கரும்புக்கடையில் சாலை விரிவாக்கம்: 20 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கோவை, ஏப். 17: கோவை - கரும்புக்கடை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த 20}க்கு மேற்பட்ட கடைகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி கோவையைச் சுற்றிலும் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக உக்கடம்- கரும்புக்கடை போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆத்துப்பாலம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
விரிவாக்கம் செய்யவுள்ள பகுதியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக் கடைகளை அகற்ற ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநர் நாகராஜன், கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன், மாநகரக் காவல் உதவி ஆணையர் பாலாஜி சரவணன், கோவை தெற்கு வட்டாட்சியர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கரும்புக்கடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையம் மற்றும் 20}க்கு மேற்பட்ட கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பாக இருந்தது. கோவை} பொள்ளாச்சி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.