தினமலர் 22.03.2010
நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: கலெக்டர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் (பொ) கருணாகரன் தலைமையில் நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் (பொ) கருணாகரன் பேசியதாவது: நீர்நிலை புறம்போக்குகளான ஏரி, குளம், வாரி, ஆறு, வாய்க்கால் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லம்புதூர் ஏரியினை விரிவாக்கம் செய்ய பொதுப்பணித்துறையினர் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். வெண்ணாற்றில் உள்ள காமாட்சியம்மன் கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நில அளவை செய்து தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெறாமல் ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள பல நிறுவனங்களின் விளம்பர தட்டிகளை உடனடியாக அகற்ற நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாவட்டத்திலுள்ள நீர்நிலைப்புறம்போக்குகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கையினை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரவிக்குமார், ஆர்.டி.ஓ., க்கள் தஞ்சாவூர் ரவீந்திரன், கும்பகோணம் செங்குட்டுவன், பட்டுக்கோட்டை மெய்யழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.