தினமணி 25.02.2010
குரோம்பேட்டையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் சீல் வைப்பு
சென்னை, பிப்.24: சென்னை குரோம்பேட்டையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்துக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர்.
விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக 2007}ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதன் பிறகு புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்தால் அந்த கட்டடங்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க சி.எம்.டி.ஏ. உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட பகுதியின் உள்ளாட்சி அமைப்பின் துணையுடன் சி.எம்.டி.ஏ.வின் அமலாக்கப் பிரிவு நடை முறைப்படுத்தி வருகிறது.
2007} ஜூலை மாதத்துக்கு பிறகு கட்டப்படும் கட்டடங்களில் விதிமீறல் அதிகம் உள்ளதாக சுமார் 100}க்கும் மேற்பட்ட கட்டடங்களின் பட்டியலை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இறுதி செய்தனர்.
இந்த பட்டியலில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு விதிமீறல் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. இதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் இருந்த கட்டடங்களை பூட்டி சீல் வைப்பது, இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஓராண்டாக இந்த நடவடிக்கையில் சென்னை மற்றும் புறநகரில் 30}க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி. சாலையில் எம்.ஐ.டி. மேம்பாலம் அருகில் சர்வே எண்: 489/4 நிலத்தில் தரைதளத்துடன் சேர்த்து 3 தளம் வரை அனுமதி வாங்கிய தனியார் ஒருவர் விதிகளை மீறி 6 மாடி வரை கட்டியுள்ளார்.
இது குறித்து சி.எம்.டி.ஏ. அனுப்பிய நோட்டீஸ்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்காததால், அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி கட்டடத்தை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனர் என சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்