தினமலர் 18.02.2010
விருதுநகரில் இனி வாரம்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விருதுநகர் :விருதுநகரில் இனி வாரம் தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகரில் பல இடங்களுக்கும் மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மேலரதவீதி, தெற்கு ரதவீதி வழியாக மட்டும் வந்து செல்கின்றன. இந்த பஸ்களை மெயின் பஜார் வழியாக வரவோ அல்லது செல்லவோ நடவடிக்கை எடுத்தால் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்புகள் தானாக அகன்றுவிடும். அதுபோல, நகராட்சிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் கடைகள் வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என டெண்டர் விடப்படுகிறது. ஆனால் டெண்டர் எடுத்தவர்களோ நகராட்சி பகுதிகள் முழுவதும் கடை வைத்துள்ளவர்களிடம் வசூல் செய்கிறார்கள். இதனாலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. எனவே நகராட்சிப் பகுதியில் டெண்டர் எடுத்துள்ள பகுதிகளில் மட்டுமே கடைகள் போடவும், வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டரின் உத்தரவுபடி விருதுநகரில் இனி வாரம்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமென்றும், அடுத்த வாரம் பழைய அருப்புக்கோட்டை ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.