தினமலர் 17.02.2010
காஞ்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நாளை பிரம்மோற்சவம் துவங்க உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளும் படி அப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. நேற்று மாலை நகராட்சி ஊழியர்கள் திடீரென காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கினர்.அதைக் கண்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.காமாட்சியம்மன் கோவிலில் நாளை(18ம் தேதி) பிரம்மோற்சவம் துவங்க உள்ளது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பொறுத்திருந்த அதிகாரிகள் பிரம்மோற்சவம் முடிந்த பின் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்கலாம். தற் போது இடிபாடுகளை அகற்றாவிட்டால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவர் என்றனர்.இது குறித்து நகராட்சி ஊழியர்களை கேட்டபோது உடனடியாக இடிபாடுகளை அகற்றிவிடுவோம் என்றனர். ரயில்வே ரோடில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பல நாட்களாகியும் இடிபாடுகள் அகற்றப்படவில்லையே எனக் கேட்டபோது அதை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும் என்றனர்.