தினமலர் 04.02.2010
ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதிகளை சீரமைக்க நகராட்சிக்கு உத்தரவு
கம்பம்: கம்பம் நகராட்சியில், தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்ட பகுதிகளை, நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கம்பம் மெயின்ரோட்டில் சில வாரங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. இதில், நூற்றுக்கணக்கான கடைகள், குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றிய பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், செலவாகும் நிதியை யார் ஏற்றுக் கொள்வது என்பது குறித்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளவில்லை. மெயின்ரோட்டில் 1.5 கி.மீ., தூரத்திற்கு ரோட்டின் இரண்டு பக்கமும் இடிக்கப்பட்ட கட்டட இடிபாடுகளை விட்டு சென்றுவிட்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் சாக்கடையை சுத்தம் செய்வதில் நகராட்சி திணறி வருகிறது. சாக்கடை கட்ட வேண்டும் என்றால் இரண்டு கோடி ரூபாய் வரை செலவாகும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது. அந்த அளவிற்கு நிதி நகராட்சியில் நிதி கிடையாது
இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் வருகை தருவதை முன்னிட்டு ரோட்டை சுத்தமாக வைக்க நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட கலெக்டர் முத்துவீரன் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம், தற்போது ரோட்டின் இரு பக்கங்களிலும் உள்ள கட்ட இடிபாடுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட துவங்கியுள்ளது. இருந்த போதும் சாக்கடை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.