தினமணி 09.01.2010
மீண்டும் ஆக்கிரமிப்பு: நகராட்சி நடவடிக்கை
போடி, ஜன. 18: போடியில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் கடை வைத்தவர்களின் பெட்டிக் கடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போடி பகுதியில் 30 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மாதம் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் ரோடுகள் அகலமாயின. மேலும் ரோடுகளின் இருபுறமும் கயிற்று எல்லை அமைத்து வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டன.
இந் நிலையில், போடி சார்-பதிவாளர் அலுவலகம் பகுதியில் மீண்டும் சிலர் பெட்டிக் கடைகளை வைத்தனர். இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார், அந்தக் கடைகளை அகற்றி, பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில், நகராட்சி அலுவலர்கள் ஆக்ரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்ரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த பெட்டிக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகளை அகற்றி, பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.
மேலும், போடி பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், பழைய பஸ் நிலையத்திலிருந்து திருமலாபுரம் செல்லும் சாலையில் ஆக்ரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யப்பட்டுள்ளது, இந்த பகுதியில் சில குடியிருப்பு வீடுகளும் இடிக்கப்பட உள்ளதால், அவர்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், சில தினங்களில் இந்தச் சாலையிலும், மீனாட்சி தியேட்டர் லைன் உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.