Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு: கட்டணம் செலுத்த பள்ளிக்கு உத்தரவு

Print PDF

தினமலர் 11.01.2010

'ரிசர்வ் சைட்' ஆக்கிரமிப்பு: கட்டணம் செலுத்த பள்ளிக்கு உத்தரவு

கோவை: கோவை மாநகராட்சியில் "ரிசர்வ் சைட்' இடத்தை தனியார் பள்ளி நிர்வாகம் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும், என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் பீளமேடு - ஆவராம்பாளையம் ரோட்டில் சாந்தி நகர் உள்ளது. கடந்த 1965ல் நகர ஊரமைப்பு துறையின் அங்கீகாரத்துடன் 5.30 ஏக்கர் பரப்பில் "லே - அவுட்' அமைக்கப்பட்டது; மொத்தம் 55 மனையிடங்கள் விற்கப்பட்டன.

பொது ஒதுக்கீட்டு இடம் (ரிசர்வ் சைட்) 4 இடங்களில் பிரித்து ஒதுக்கப்பட்டது. அதில், ஓரிடத்தில் 13 சென்ட் பரப்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடம் இருந்தது. "லே-அவுட்' உருவாக்கப்பட்டபோது இந்த பகுதி முழுவதும் பீளமேடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. கடந்த 1981ல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தபோது, இந்த பொது ஒதுக்கீட்டு இடங்கள் எதுவும் முறைப்படி ஒப்படைக்கப்படவில்லை. இதனால், இந்த இடங்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டன. குழந்தைகள் விளையாட்டு மைதான இடத்தில் பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்தப்பட்டது. பொதுமக்கள் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. அதையொட்டிய இடத்தை, அருகில் 17வது வார்டிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கு பின் புறப்பாதையாக மாற்றிக் கொண்டது. இந்த இடங்களை மீட்க, அப்பகுதி மக்கள் போராடினர். பொது மக்கள் பயன்பாட்டுக்குரிய இடத்தை ஆக்கிரமித்த தனியார் பள்ளிக்கு, 17வது வார்டு பகுதியில் முக்கிய நுழைவாயில் இருந்தும், இந்த பாதையையும் பயன்படுத்த அனுமதிக்குமாறு முதன்மை முன்சீப் கோர்ட்டை பள்ளி நிர்வாகம் அணுகியது. அதை "பொது வழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று முன்சீப் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து, "சாந்தி நகர் குடியிருப்போர் சங்கம்" சார்பில், அதன் தலைவர் கஸ்தூரி சாமி, முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கின் முடிவில், "அது மக்கள் பயன்பாட்டுக்குரிய இடம்தான்' என்று 2006 அக்டோபர் 12ல் தீர்ப்பானது. அந்த இடத்தை பாதையாக மாற்றக்கூடாது என்றும், கோர்ட் அறிவுறுத்தியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த 2007ல் சென்னை ஐகோர்ட்டில் தனியார் பள்ளி நிர்வாகம் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கில், கடந்த 19ம் தேதியன்று அதிரடியான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி பானுமதி வழங்கிய இந்த தீர்ப்பில், "பள்ளி நிர்வாகம், இந்த இடத்துக்கு சொந்தம் கொண்டாட முடியாது. அதே நேரத்தில், குழந்தைகள் 2 கி.மீ., சுற்றி வருவதை தவிர்க்க, இந்த இடத்தில் 4 அடிக்கு மட்டும் பாதையாக பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

வாகனங்கள் செல்லவோ, வேறு எந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட், அந்த பாதையைப் பயன் படுத்த, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும், என்றும் உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை குழந்தைகள் விளையாட்டு மைதானத்தை பராமரிக்க பயன்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் தெளிவு படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு, சாந்தி நகரில் உள்ள பொது மக்களை பெரிதும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதோடு, "ரிசர்வ் சைட்' தொடர்பான வழக்குகளுக்கு முன் மாதிரியாகவும் உள்ளது. ஆனால், குழந்தைகள் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமலே உள்ளது. பதினைந்து ஆண்டுகளாக கருப்பண்ணன் என்பவர் ஆக்கிரமித்து இருந்த இந்த இடம், கடந்த ஆண்டு ஜனவரியில் தான் மீட்கப்பட்டது. அங்கிருந்த கட்டடம் இடிக்கப்பட்டு, ஓராண்டாகியும் அந்த இடத்தில் குழந்தைகள் விளையாட்டு மைதானம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதற்காக, வார்டு கவுன்சிலர் சந்திரசேகரும் குரல் கொடுப்பதாக தெரியவில்லை. ரிசர்வ் சைட் இடங்களை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முயற்சித்தால் நல்லது.

பூங்கா அமையுமா?: இங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்திருந்த கட்டடத்தை, கடந்த ஆண்டு ஜன.,31ல் மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது. ஆனால், இன்று வரை அந்த இடிபாடுகள் கூட அகற்றப்படவில்லை. ஆளும்கட்சி கவுன்சிலர்களின் வார்டுகளில் லட்ச லட்சமாய் செலவழித்து, புதிது புதிதாக பூங்கா அமைக்கப்படுகிறது; .தி.மு.., கவுன்சிலர் வார்டு என்ற ஒரே காரணத்துக்காக இந்த பகுதியில் ஒரு பூங்காவை கூட மாநகராட்சி நிர்வாகம் அமைக்கவில்லை என இங்குள்ள மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Last Updated on Monday, 11 January 2010 11:30
 

வி.கே.புரத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றம்

Print PDF

தினமணி 11.01.2010

வி.கே.புரத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றம்

அம்பாசமுத்திரம், ஜன. 10: விக்கிரமசிங்கபுரத்தில் மங்கம்மாள் சாலையில் தனிநபர் ஆக்கிரமிப்பை வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டனர்.

விக்கிரமசிங்கபுரம் பசுக்கடைவிளையில் உள்ள மங்கம்மாள் சாலை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதனால், இச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.

இதையடுத்து, இச் சாலையைத் திறக்க அப்போதைய எம்எல்ஏ நடவடிக்கை எடுத்தார். அதன் பிறகு அச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே, அச் சாலையில் பசுக்கடைவிளையில் வசிக்கும் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனக்கூறி சாலையின் குறுக்கே கல்வைத்து ஆக்கிரமித்திருந்தார். இதை ஆட்சேபித்து பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர்.

இப் பிரச்னை குறித்து பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், சேரன்மகாதேவி துணை ஆட்சியர் கே. வீரராகவராவ் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மங்கம்மாள் சாலையில் தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச் சாலையில் இருந்த ஆக்கிரமிப்பை நகர்மன்றத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன், நிர்வாக அதிகாரி இ. முருகன், அம்பாசமுத்திரம் துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் ரா. சிவசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை பொதுமக்கள் முன்னிலையில் அகற்றினர். இதைத் தொடர்ந்து இச் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

Last Updated on Monday, 11 January 2010 07:07
 

வருவாய்த்துறை நிலத்தை மீட்டுக்கொடுத்த கோவை மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி 08.01.2010

வருவாய்த்துறை நிலத்தை மீட்டுக்கொடுத்த கோவை மாநகராட்சி அதிகாரிகள்

கோவை, ஜன.7: வருவாய்த் துறைக்கு சொந்தமான நிலத்தை, கோவை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர்.

கோவை சிவானந்தாகாலனி 30 அடி சாலையில் உள்ள வள்ளுவர் வீதியில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த ராமன் வீடு கட்டி தோட்டமும் அமைத்திருந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை முயன்றும் அந்த நிலத்தை மீட்க முடியவில்லை.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளின் உதவியை நாடினர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் செüந்தரராஜன் தலைமையில் வடக்கு மண்டல உதவி ஆணையர் பொன்முடி, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர்கள் காந்திமதி, கிருஸ்ணவேணி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வியாழக்கிழமை சென்றனர்.

பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க முயன்றபோது அங்கு வந்த ராமனின் மகன் செல்லமுத்து மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மீது சிலர் கற்களையும் வீசினர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீட்டை இடித்த அதிகாரிகள், அந்த இடத்தை மீட்டு வருவாய்த்துறையிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.

Last Updated on Friday, 08 January 2010 10:36
 


Page 158 of 204