தினமணி 19.12.2009
தாராபுரம் நகராட்சிப் பகுதியில் 21-ல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தாராபுரம், டிச.18: தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் வரும் 21-ம் தேதி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கும் என்று நகராட்சி ஆணையர் எஸ்.துரை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை, ஞாயிற்றுக்கிழமைக்குள் ஆக்கிரமிப்பாளர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் திங்கள்கிழமையன்று நகராட்சிப் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுவார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் திருப்பித் தரப்பட மாட்டாது. எவ்வித அரசியல் தலையீடுகளுக்கும் அஞ்சாமல், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறும் என்றார்.