தினமணி 17.12.2009
திருச்சி சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்
கோவை, டிச.16: கோவை - திருச்சி சாலையில் இருந்த ஆக்கிரமிரப்பு கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.
திருச்சி சாலை, 50-வது திட்டச்சாலை, கொங்குநகர் சாலை ஆகிய மூன்று சாலைகளின் சந்திப்பு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு இருந்தது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து உதவி நகரமைப்பு அலுவலர்கள் ரவிச்சந்திரன், புவனேஸ்வரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 600 ச.அடி பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் ஹோட்டல் மற்றும் மீன்கடை இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து அக்கட்டடத்தை முழுவதும் அதிகாரிகள் அகற்றினர். அகற்றப்பட்ட இடத்தில் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள வணிக வளாகத்தையும் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு தரைதளத்தில் வாகனம் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலும் வணிக வளாகத்தின் ஒரு பகுதி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து வாகன நிறுத்துமிடத்தில் வர்த்தக பொருட்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவை அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வணிக வளாகங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்றும் வாகன நிறுத்தும் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.