தினமணி 04.12.2009
நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருநெல்வேலி, டிச. 3: திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருநெல்வேலி நகரம் மேலரத வீதியில் செல்லும் கழிவுநீர்க் கால்வாயை சில கடைகள் ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. இதனால், கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதற்கு அப்போது வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை மாநகராட்சி ஊழியர்கள் அங்கு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப் பணியில் சுமார் 20 ஊழியர்கள் பொக்லைன் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதில் 4 இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன.