தினமணி 12.11.2009
ரூ.10 கோடி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு
ஒசூர், நவ.12: ஒசூர் ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தேர்ப்பேட்டை பச்சைக்குளத்தைச் சற்றி ரூ.10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது சர்வே செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோயில் பச்சைக்குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இக்குளத்தை அளவெடுத்து, தூய்மைப்படுத்தி, பராமரிப்புப் பணி செய்ய, ஸ்ரீசந்திரசூடேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் வரதராஜன், உறுப்பினர்கள் சுசிலா செüந்தர்ராஜன், பாரதி கஜேந்திரன், செயல் அலுவலர் திருஞானசம்மந்தன், நகராட்சி சர்வேயர் ரகுநாதன் உள்ளிட்டோர் வியாழக்கிழமை சென்று பச்சைக்குளத்தை சர்வே செய்தனர்.
இதில் மொத்த பரப்பளவான 2.55 ஏக்கரில் குளம் 0.5 ஏக்கர் போக, மீதி 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அங்கு 2 திருமண மண்டபம் உள்பட 48 வீடுகள் கட்டி மக்கள் குடியேறி உள்ளனர்.
இது குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் வரதராஜன் கூறியது:
ஒசூர் தேர்ப்பேட்டையில் ஒரு செண்ட் நிலம் ரூ.5 லட்சம் விலைபோகிறது. அதன்படி பார்த்தால் ரூ.10 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையான சர்வே செய்து போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நிலத்தை மீட்போம் என்றார் அவர்