தினமணி 07.11.2009
நடைபாதையில் இயங்கிய காய்கறிக் கடைகள் அகற்றம்
கள்ளக்குறிச்சி, நவ.6: கள்ளக்குறிச்சி உழவர் சந்தைக்கு வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு விற்பனை செய்யாததால் சாலையின் ஓரங்களில் வைத்து காய்கறி விற்பனை செய்து வந்த வியாபாரிகளின் கடைகளை வேளாண்மைத் துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் 2007ல் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. அதில் 42 கடைகள் உள்ளன. இக் கடைகளில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கும், விவசாயிகள் நிலங்களில் காய்கறிகளை பயிர் செய்து அரசு பஸ் மூலம் இலவசமாக கொண்டு வந்து விற்பனை செய்வதற்கும் அரசின் சார்பில் 627 பேர்களுக்கு உழவர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை அரசு பஸ்ஸில் இலவசமாக கொண்டு வந்து கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்டிலும், அதன் அருகில் சாலையில் ஓரங்களில் இரு புறமும் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.மேலும் சாலை ஓரங்களில் காய்கறிகளை வைத்து விற்பனை செய்து வருவதரால் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகின்றது.
இதை தொடர்ந்து ஆட்சியர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் மாவட்ட வேளாண்மை வணிகத்துறை இயக்குநர் என்.தனவேல் தலைமையில் மாவட்ட வேளாண்மை அலுவலர் ஆர்.பழனிச்சாமி, வேளாண்மை அலுவலர் ஜெ.நபிஷாபேகம், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சந்திரசேகரன், நகராட்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் போலீஸôர் சாலையோரம் வைத்திருந்த காய்கறிக் கடைகளை அகற்றினர்.