Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF
தினமணி       04.04.2013

போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


போளூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

போளூர் பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை, துணிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இக் கடைகளின் முன்பக்கம் தகர ஷீட் அமைத்து கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் நேரிடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவுப்படி, நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் அய்யாதுரை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கணேசன், பேரூராட்சி செயல் அலுவலர் நிஷாத் ஆகியோர் தலைமையில் பழைய பஸ் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை தெரு மற்றும் புதிய பஸ் நிலையப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
 

வருவாயை பெருக்க மாநகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள்: மண்டலக் குழு தலைவர்கள் யோசனை

Print PDF
தினமணி       04.04.2013

வருவாயை பெருக்க மாநகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள்:  மண்டலக் குழு தலைவர்கள் யோசனை

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வருவாயை பெருக்க வேண்டும் என்று வேலூர் மாநகராட்சியில் நடைபெற்ற குடிநீர் பிரச்னைகள் மற்றும் இவ்வாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர்கள் யோசனை தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு மேயர் பா.கார்த்தியாயினி தலைமை தாங்கினார். ஆணையர் ஜானகி ரவீந்திரன், பொறியாளர் தேவக்குமார், மண்டலக் குழு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"1-வது மண்டலத்தில் அடங்கிய காட்பாடி, தாராபடவேடு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட பணிகளில் 75 சதவீதம் நிலுவையில் உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட வேண்டும். மாநகராட்சிக்கு அதிக சொத்து வரி வசூல் தரும் பகுதியாக மண்டலம் 1 இருப்பதால் அதற்குரிய வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

மண் சாலைகளை தரம் உயர்த்த வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் மண்டலம் 1 பகுதிகள் வந்துள்ள நிலையில், பல தெருக்கள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை'' என்று 1-வது மண்டலக் குழுத் தலைவர் சுனில்குமார் தெரிவித்தார்.

"சத்துவாச்சாரி, வள்ளலார் அடங்கிய மண்டலம் 2 பகுதியில் ஆட்சியர் அலுவலகம் எதிரேயும், ஆவின் நிறுவனம் அருகேயும் உள்ள காலி இடங்களில் வணிக வளாகம் கட்ட வேண்டும். அலமேலுமங்காபுரம், மூலைகொல்லை பகுதிகளில் சாலைப் பணிகள் நிலுவையில் உள்ளன. புதிதாக மாநகராட்சி பகுதியில் சேர்க்கப்பட்ட 18 மற்றும் 19 வார்டுகளில் மின்விளக்கு, சாலை, கால்வாய் வசதி செய்துதர வேண்டும்'' என்று 2-வது மண்டலக் குழுத் தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம் கேட்டுக் கொண்டார்.

"பழைய மாநகராட்சி கட்டடத்தை புதுப்பிப்பதோடு, அப்பகுதியில் வணிக வளாகம் கட்ட வேண்டும். பூந்தோட்டம் பூங்கா, சாஸ்திரி நகர் பூங்கா உள்ளிட்டவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.

44-வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான மாந்தோப்புக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். பலவன்சாத்து கப்பம் ஏரியை தூர்வார வேண்டும்'' என்று 3-வது மண்டலக் குழுத் தலைவர் குமார் கேட்டுக் கொண்டார்.

மேயர் பதில்

"மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். இவற்றின் வளர்ச்சிப் பணிகளுக்கு அரசின் சிறப்பு நிதியுதவியை பெறலாம். பிற பணிகளுக்கு பொது நிதியில் இருந்து செலவிடலாம்.

4 மண்டலங்களிலும் சுடுகாடு, அதன் அருகே காரிய மேடை அமைத்தல், பூந்தோட்ட அமைப்புடன் இப்பகுதிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் இடம் தேர்வு செய்தால், எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேயர் பா.கார்த்தியாயினி தெரிவித்தார்.

நியமனக்குழு தலைவர் சி.கே.சிவாஜி, கல்விக்குழு உறுப்பினர் சூரியாச்சாரி, மாமன்ற உறுப்பினர் அன்வர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

மலிவு விலை உணவகங்களை பகுதிவாரியாக திறக்க கோரிக்கை

Print PDF
தினமணி       04.04.2013

மலிவு விலை உணவகங்களை பகுதிவாரியாக திறக்க கோரிக்கை


சென்னை மாநகராட்சியில் வார்டு வாரியாக தொடங்கப்பட்டுள்ள மலிவு விலை உணவகங்களை பகுதிவாரியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

காலையில் உணவகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இட்லிகள் விற்றுத் தீர்ந்துவிடுவதால் பலர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே பகுதிவாரியாக மலிவு விலை உணவகங்களைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1,500 இட்லிகள்: அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1,500 இட்லிகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு இட்லி ரூ. 1-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் ஒரு இட்லிக்கான தயாரிப்புச் செலவு ரூ. 1.86 ஆகிறது என்று முதலவர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது. தயிர் சாதம் ரூ. 3-க்கும், சாம்பார் சாதம் ரூ. 5-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு நாள் ஊதியம் ரூ. 300: மலிவு விலை உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 300 ஊதியம் வழங்கப்படுகிறது. இப்போது ஓர் உணவகத்துக்கு 12 பேர் வரை பணிபுரிகிறார்கள்.  அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் உணவு மேஜை வசதி, தண்ணீர் வசதி ஆகியவை முழுமையாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. சில வார்டுகளில் தாற்காலிக இடங்களில் செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு 10 நாள்களுக்குள் நிரந்தர கட்டடம் ஏற்பாடு செய்துத் தரப்படும். அந்த உணவகங்களிலும்கூட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒன்று என 15 மலிவு விலை உணவகங்களை பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி 24 உணவகங்களும், மார்ச் 6ஆம் தேதி 34 உணவகங்களும் திறக்கப்பட்டன. மீதமுள்ள 127 உணவகங்களை விடியோ கான்பரன்சிங் மூலம் ஏப்ரல் 2ஆம் தேதி முதல்வர் திறந்து வைத்தார்.
 


Page 22 of 204