தினமலர் 03.04.2013
கோவை நகரிலிருந்த விளம்பரப் பலகைகள் அதிரடியாக அகற்றம் : அனுமதி முடிந்ததால், மாநகராட்சி நடவடிக்கை
கோவை நகரிலிருந்த விளம்பரப் பலகைகள் அதிரடியாக அகற்றம் : அனுமதி முடிந்ததால், மாநகராட்சி நடவடிக்கை
கோவை : தி.மு.க., ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட அனுமதி நேற்று முன் தினம் முடிவடைந்ததை முன்னிட்டு, கோவை நகருக்குள் உள்ள விளம்பர விளக்குகள் மற்றும் விளம்பரப் பலகைகள் அதிரடியாக நேற்று அகற்றப்பட்டன.
கோவை நகரில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, அனுமதியின்றியும், விதிகளை மீறியும் ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன; குறிப்பாக, செம்மொழி மாநாட்டின்போது, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பாரதியார் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகளிலும், ரேஸ்கோர்ஸ் நடைபாதையிலும் ஏராளமான விளம்பர விளக்குகள் (ஷைன் போர்டு) வைக்கவும், பயணிகள் நிழற்குடைகளை அமைத்து, அவற்றில் விளம்பரங்கள் வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது; அப்போதே இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய சாலைக்குழும விதிகளுக்கு எதிராகவும் இந்த விளம்பர விளக்குகள் வைப்பதாக புகார் எழுந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் நகரம் முழுவதும் விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பர விளக்குகள் ஏராளமான அமைக்க அனுமதி வாரி வழங்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் நடைபாதையைப் பராமரிப்பதற்கு ஈடாக, விளம்பர விளக்குகளை வைத்துக்கொள்ளவும் விளம்பர நிறுவனங்களுடன் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டது.
நடைபாதை மற்றும் சாலையோரத் தோட்டங்கள் எதையும் முறையாகப் பராமரிக்காத இந்த நிறுவனங்கள், விளம்பரங்களை வைத்து சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தன.
இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்; அதே அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இவை அனைத்தும் அகற்றப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது; மாறாக, மேலும் பல இடங்களில் இவற்றை வைக்கும் முயற்சி நடந்தது. ஆனால், இதற்கு அனுமதி தர வேண்டிய கலெக்டர், எந்த அனுமதியையும் நீட்டித்துத்தரவில்லை.
அடுத்து வரும் கலெக்டர், இவ்வாறு அனுமதி தர மாட்டார் என்பதைக் கருத்தில் கொண்டே, முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது, ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள விளம்பர விளக்குகளுக்கு 3 ஆண்டுகள் அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதிக்காலம், நேற்று முன் தினம் (மார்ச் 31) முடிவடைந்தது. அனுமதி முடிவுற்றதையடுத்து, ரேஸ்கோர்ஸ் நடைபாதையை ஒட்டியும், வலது புறத்திலும் வைக்கப்பட்டிருந்த 300 விளம்பர விளக்குகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நேற்று அகற்றினர்.
அதேபோன்று, கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டில், தரப்பட்ட அனுமதிக்கு மாறாக, விதிகளை மீறி வெகு நீளமாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் அகற்றப்பட்டன. ஆனால், புரூக்பாண்ட் ரோட்டில், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச்சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவில்லை.
மார்ச் 31 உடன் அவற்றுக்கும் அனுமதி முடிவடையும் நிலையில், கடந்த மாதத்தில்தான் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகச் சுவற்றில் புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு, விளம்பரம் வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரேஸ்கோர்ஸ் நடைபாதையிலிருந்த விளம்பர விளக்குகள் அகற்றப்பட்டிருப்பது, அங்கு தினமும் "வாக்கிங்' வரும் பல ஆயிரம் பேரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறுகலான ரேஸ்கோர்ஸ் ரோட்டில், இரவு நேரங்களில் கவனத்தைச் சிதறடித்து வந்த விளம்பர விளக்குகள், இனிமேல் மீண்டும் வைக்கப்படாது என்பது அவ்வழியை அடிக்கடி பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த விளம்பர விளக்குகளுக்காக, நடைபாதையை ஒட்டியே ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது; இவற்றை அகற்றுவதால், ஜெனரேட்டர் சத்தத்திலிருந்தும் பாதசாரிகள் விடுதலை பெறுவார்கள்.
கோவை நகரில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, அனுமதியின்றியும், விதிகளை மீறியும் ஏராளமான விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன; குறிப்பாக, செம்மொழி மாநாட்டின்போது, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பாரதியார் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகளிலும், ரேஸ்கோர்ஸ் நடைபாதையிலும் ஏராளமான விளம்பர விளக்குகள் (ஷைன் போர்டு) வைக்கவும், பயணிகள் நிழற்குடைகளை அமைத்து, அவற்றில் விளம்பரங்கள் வைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது; அப்போதே இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்கும் வகையிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய சாலைக்குழும விதிகளுக்கு எதிராகவும் இந்த விளம்பர விளக்குகள் வைப்பதாக புகார் எழுந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் நகரம் முழுவதும் விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பர விளக்குகள் ஏராளமான அமைக்க அனுமதி வாரி வழங்கப்பட்டது. ரேஸ்கோர்ஸ் நடைபாதையைப் பராமரிப்பதற்கு ஈடாக, விளம்பர விளக்குகளை வைத்துக்கொள்ளவும் விளம்பர நிறுவனங்களுடன் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டது.
நடைபாதை மற்றும் சாலையோரத் தோட்டங்கள் எதையும் முறையாகப் பராமரிக்காத இந்த நிறுவனங்கள், விளம்பரங்களை வைத்து சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தன.
இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்; அதே அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இவை அனைத்தும் அகற்றப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது; மாறாக, மேலும் பல இடங்களில் இவற்றை வைக்கும் முயற்சி நடந்தது. ஆனால், இதற்கு அனுமதி தர வேண்டிய கலெக்டர், எந்த அனுமதியையும் நீட்டித்துத்தரவில்லை.
அடுத்து வரும் கலெக்டர், இவ்வாறு அனுமதி தர மாட்டார் என்பதைக் கருத்தில் கொண்டே, முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது, ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள விளம்பர விளக்குகளுக்கு 3 ஆண்டுகள் அனுமதி தரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதிக்காலம், நேற்று முன் தினம் (மார்ச் 31) முடிவடைந்தது. அனுமதி முடிவுற்றதையடுத்து, ரேஸ்கோர்ஸ் நடைபாதையை ஒட்டியும், வலது புறத்திலும் வைக்கப்பட்டிருந்த 300 விளம்பர விளக்குகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நேற்று அகற்றினர்.
அதேபோன்று, கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பஸ் ஸ்டாண்டில், தரப்பட்ட அனுமதிக்கு மாறாக, விதிகளை மீறி வெகு நீளமாக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் அகற்றப்பட்டன. ஆனால், புரூக்பாண்ட் ரோட்டில், தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச்சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவில்லை.
மார்ச் 31 உடன் அவற்றுக்கும் அனுமதி முடிவடையும் நிலையில், கடந்த மாதத்தில்தான் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகச் சுவற்றில் புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு, விளம்பரம் வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரேஸ்கோர்ஸ் நடைபாதையிலிருந்த விளம்பர விளக்குகள் அகற்றப்பட்டிருப்பது, அங்கு தினமும் "வாக்கிங்' வரும் பல ஆயிரம் பேரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறுகலான ரேஸ்கோர்ஸ் ரோட்டில், இரவு நேரங்களில் கவனத்தைச் சிதறடித்து வந்த விளம்பர விளக்குகள், இனிமேல் மீண்டும் வைக்கப்படாது என்பது அவ்வழியை அடிக்கடி பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியை அளித்துள்ளது. இந்த விளம்பர விளக்குகளுக்காக, நடைபாதையை ஒட்டியே ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது; இவற்றை அகற்றுவதால், ஜெனரேட்டர் சத்தத்திலிருந்தும் பாதசாரிகள் விடுதலை பெறுவார்கள்.