தினகரன் 05.09.2012
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் அதிரடி கடை?ஆக்கிரமிப்புகள்?தரைமட்டம் காஸ்?பயன்படுத்தியவர்கள்?ஓட்டம்
மதுரை, : மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகளில் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன. விதியை மீறி காஸ் சிலிண்டர் பயன்படுத்திய வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு ஓடி விட்டனர்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்டில் மாநகராட்சி சார்பில் 141 கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இங்கு விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகளால் இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மாநகராட்சி துணை ஆணையாளர் சாம்பவி தலைமையில் நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன் மற்றும் அலுவலர்கள் பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். ஏராளமான கடைகள் அனுமதிக்கப்பட்ட ஒரு வாசலுக்கு பதில் பக்கவாட்டில் இடித்து இரு வாசல் ஏற்படுத்தி, 2 கடைகளாக்கப்பட்டு இருந்தன.
கடைகள் முன் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்தும், கட்டிட சுவரை இடித்தும் ஷோகேஸ்கள் மற்றும் அலங்கார போர்டுகள் பொருத்தப்பட்டு இருந்தன. 100க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் 2 கடைகளாக்கிய தடுப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதில் ஷோகேஸ்கள், கண்ணாடிகள் நொறுங்கின. பஸ் ஸ்டாண்ட் கடைகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்த அனுமதி கிடையாது. இதை மீறி சில கடைகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதிகாரிகள் நடவடிக்கையை கண்டதும் காஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்களும், விதிமீறிய கடைக்காரர்கள் பலரும் கடைகளை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மாலை 5 மணி வரை நிறுத்தும்படி துணை ஆணையாளர் சாம்பவியிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மன்றாடினர். அதை துணை ஆணையாளர் ஏற்கவில்லை.போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளத்துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு நிலவியது.