ரவுண்டானா பணி: மேலப்பாளையம் சந்தை சந்திப்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்
திருநெல்வேலி, ஆக. 29: மேலப்பாளையம் சந்தை சந்திப்பில் ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் தொடங்கவுள்ளதை யொட்டி, அப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.
மாநகராட்சிக்கு உள்பட்ட மேலப்பாளையம் சந்தை நான்குமுனை சந்திப்புப் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
சேரன்மகாதேவியில் இருந்து திருநெல்வேலி வரும் சாலை, புதிய பஸ் நிலையத்தில் இருந்து பத்தமடை வழியாக செல்லும் சாலை, சந்திப்பில் இருந்து குறிச்சி வழியாக மேலப்பாளையம் வரும் சாலை, டக்கரம்மாள்புரத்தில் இருந்து சந்தை வழியாக வரும் சாலை ஆகிய 4 சாலைகள் இங்கு சந்திக்கின்றன.
இதனால் அங்கு எப்போது வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, ரவுண்டானா அமைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இப் பணிக்காக தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பணி அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை தொடங்கினர். உதவிப் பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இப் பணியில் ஈடுபட்டனர்.
நேதாஜி சாலை, சந்தை முக்கு, வி.எஸ்.பள்ளிவாசல், அம்பை சாலை பகுதியில் 100 கடைகளின் முன் போடப்பட்ட ஷெட்டுகள், மேற்கூரைகள் அகற்றப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த கடைகளும் இடிக்கப்பட்டன. தொடர்ந்து, அப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படும். மாநகராட்சி மூலம் மரங்கள் அப்புறப்படுத்தப்படும்.
பின்னர் ரவுண்டானா பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆக்கிரமிப்பு அகற்றும் பணியையொட்டி மேலப்பாளையம் ஆய்வாளர் ஜெயசேகரன் தலைமையில் ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டனர்.