தினமணி 20.08.2009
ராமேசுவரத்தில் மலேரியா தடுப்பு ஆராய்ச்சி நிலையம்: அதிகாரி ஆய்வு
ராமேசுவரம், ஆக. 19: ராமேசுவரத்தில் மலேரியா காய்ச்சல் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்துக்கான இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமேசுவரம் தீவில், கடந்த சில ஆண்டுகளாக மலேரியா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந் நிலையில், மலேரியா கொசுவை ஒழிக்க, ராமேசுவரம் அருகே தென்குடாவில், மலேரியா நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம் அமைக்க, மாநில மருத்துவ இயக்குநரகம் முடிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், புதன்கிழமை ராமேசுவரம் வந்து அதற்கான இடத்தை ஆய்வு செய்தார்.
மேலும், ராமேசுவரம் பொந்தம்புளி அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் கருவூல அலுவலகம் அமைக்கப்பட உள்ளதையும், பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள நரிக்குழி இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
உடன், வட்டாட்சியர் ராஜாராமன், கிராம நிர்வாக அலுவலர் நாகநாதன் சென்றனர்.
இதன்பின் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணி குறித்தும், நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருள்களின் தரம், இருப்பு குறித்தும் ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.