தினமணி 31.08.2009
தேசிய அடையாள அட்டை திட்டம்: கர்நாடகத்தில் முதலில் தொடக்கம்
பெங்களூர், ஆக. 30: அனைத்து குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை முதன் முதலாக கர்நாடகத்தில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் முக்கியத் திட்டமாகக் கருதப்படும் தேசிய அடையாள திட்டம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒடுக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் தலைவராக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி நியக்கப்பட்டுள்ளார்.
அவர் சனிக்கிழமை பெங்களூருக்கு வந்தார். தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான செüதாவில் அரசு தலைமைச் செயலர் சுதாகர்ராவ் மற்றும் அதிகாரிகளுடன் தேசிய அடையாள அட்டை திட்டம் குறித்தும் அந்த திட்டத்தை முதலில் கர்நாடகத்தில் துவங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது மற்றும் திட்டத்துக்கான வழிமுறைகள் அடங்கிய அறிக்கையையும் தலைமைச் செயலரிடம் நந்தன் வழங்கினார்.
அடுத்த 6 மாதங்களில் இந்த திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கர்நாடக செயலராக வித்யாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மாநில அரசின் தகவல் தொடர்புத்துறை முதன்மைச் செயலராக பணியாற்றி வருகிறார். தேசிய அடையாள அட்டை திட்டப் பணிகள் அனைத்தும் மாநிலத்தில் தொடங்கிவிட்டதாக வித்யாசங்கர் தெரிவித்தார்.