தினமணி 20.09.2009
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடந்த அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கான பல்வேறு குழுக்களை அமைப்பது, எந்தெந்த குழுவினை யார் யார் தலைமையில் ஏற்படுத்துவது, ஆய்வுக் கருத்தரங்குகளை கோவையில் எங்கெங்கு நடத்துவது, ஊர்வலம் செல்லும் பாதை ஆகியன பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
4 நாள் மாநாடு: ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வெளிநாட்டில் வாழும் தமிழ் அறிஞர்கள், ஆன்றோர், சான்றோர்களுக்கு மாநாடு குறித்து உடனடியாகத் தொடர்பு கொண்டு அறிவிப்பதென்றும், அழைப்பு அனுப்புவதென்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, கோவை மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை செயலாளர் இறையன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.