தினமணி 20.01.2010
தேர்தல் ஆணையத்தின் வைர விழா: பிரதிபா துவக்குகிறார்
புது தில்லி, ஜன.19: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வைர விழாவை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஜனவரி 25-ம் தேதி துவக்கிவைக்கவுள்ளார்.
தேர்தல் ஆணையம் துவங்கி 60-வது ஆண்டு நிறைவதையொட்டி இந்த விழா நடைபெறவுள்ளது. துவக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்வர்.
மேலும் காமன்வெல்த் நாடுகள், தெற்காசிய நாடுகளின் தேர்தல் அமைப்புகளின் 40 தலைவர்களும் விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், அரசியல் சாசன பதவியில் இருந்தவர்கள், தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். விழாவில் இந்த வரலாற்று நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் அஞ்சல் தலையை குடியரசுத் தலைவர் வெளியிடுவார்.
தொடக்க விழாவைத் தொடர்ந்து ஜனவரி 27-ம் தேதி சிறந்த தேர்தல் நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.