தினமலர் 26.01.2010
சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் : கவர்னர் கொடியேற்ற ; அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
ஜனவரி 26,2010,09:16 IST![](http://img.dinamalar.com/data/images_spl/fpnmix_36555117369.jpg)
சென்னை: சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. கவர்னர் பர்னாலா, முதல்வர் மு.கருணாநிதி ஆகியோர் காலை 07:55 மணி அளவில் விழா மேடைக்கு வந்தனர். சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை கவர்னர் ஏற்றி வைத்தார். முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள் : பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் நடன, நாட்டியங்களை வண்ணமிகு உடையணிந்து நிகழ்த்திக் காட்டினர். கலை நிகழ்ச்சியை தொடர்ந்து அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் அலங்கார அணிவகுப்பு நடந்தது. முதலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அலங்கார வாகனம் அசைந்தாடி வந்தது. அடுத்ததாக ஊரகவளர்ச்சித் துறை வாகனம். அதில் தமிழகத்தில் ஊராட்சித் துறை எட்டியுள்ள சாதனைகளை விளக்கும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம்பெற்றன. உர ஆலை துறை ஊர்தி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை கண்டுள்ள மேதகு வளர்ச்சியை விளக்கும் சுற்றுலாத்துறை ஊர்தி, தொழில் துறை சாதனைகளை விளக்கும் ஊர்திகளில் முதலில் வந்தது மின்சார வாரியத்தின் ஊர்தி. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். விவசாயத்துறை ஊர்தி தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்துள்ள சலுகைகளை விளக்கியபடி அணிவகுத்தது. காவல்துறை ஊர்தியில் இருந்த காவலர்கள் மேடையில் இருந்த தலைவர்களுக்கு சல்யூட் அடித்தபடி சென்றனர்.தோட்கலைத் துறை, மீன்வளத்துறை, பால் வளத்துறை மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் வெற்றியை எடுத்துக்கூறும் விதமாக கம்பீரமாக வந்தது குடும்ப நலத்துறை ஊர்தி. அலங்கார ஊர்தி அணிவகுப்பை கவர்னரும், முதல்வரும் கண்டு ரசித்தனர். பின்னர் தேசியப் பாடல் இசைக்கப்பட்டு, விழா நிறைவடைந்தது. குடியரசு தின விழா மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக வண்ணமிகு பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.