தினமணி 19.08.2009
ஊழலுக்கு வழிவகுக்கும் சுற்றுச் சூழல் அனுமதி : மன்மோகன் வேதனை
புது தில்லி, ஆக. 18: சுற்றுச் சூழல் அனுமதி அளிப்பது ஊழல் புரிய ஒரு வழியாக அமைந்துவிட்டது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், சுற்றுச் சூழல் அனுமதி அனைத்துமே பிரச்னையற்ற, எளிதில் பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
லைசென்ஸ் ராஜ் எனப்படும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தொழில்துறையினர் எளிதில் தொழில்தொடங்க வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச் சூழல் அனுமதி பெறுவது முந்தைய லைசென்ஸ் ராஜ் போன்று மிகவும் சிக்கலாக உள்ளது. எனவே சுற்றுச் சூழல் அனுமதி வழங்குவது வெளிப்படையானதாகவும், மிக எளிதில் பெறக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
தொழில் துறையை ஊக்குவிக்கும் அதேசமயம் சுற்றுச் சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் நியாயமானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.
புவி வெப்பமடைவதைத் தடுக்க இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வளர்ச்சியடைந்த நாடுகள் கூறுவது மிகவும் தவறான பிரசாரமாகும். புவி வெப்பமடைவது குறித்த விஷயத்தில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது. குறிப்பாக இந்த விஷயத்தை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவையை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்குவதில் இந்தியா கவனமாக உள்ளது. அத்துடன் புவி வெப்பமடைவதைத் தடுப்பதில் இந்தியாவின் பங்களிப்பு என்ன என்பதையும் இந்தியா நன்கு உணர்ந்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தித் தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்பதையும் இந்தியா மதிப்பிட்டுள்ளது. இதை ஈடுகட்ட இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யும் அதேசமயம் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு நேராத வகையில் அதை எட்ட இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. இதை எட்ட வேண்டுமெனில் வளர்ச்சியடைந்த நாடுகளிடம் உள்ள தொழில்நுட்பத்தைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.
தேசிய சுற்றுச் சூழல் காப்பு திட்டத்துக்கு ஒருமித்த வகையில் மாநில அரசுகளும் தங்களது கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதன் மூலம் இந்த இலக்கை எட்ட முடியும் என்றார் மன்மோகன் சிங்.