தினமலர் 23.09.2013
ரூ.1.36 கோடியில் 29 பள்ளிகளில் ஜெனரேட்டர் அமலுக்கு வந்தது பட்ஜெட் அறிவிப்பு
சென்னை:சென்னை அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜெனரேட்டர் நிறுவப்படும் என்ற கடந்த மாநகராட்சி பட்ஜெட்டின் முதல் அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக 21 பள்ளிகளில் 1.36 கோடி ரூபாய் செலவில் ஜெனரேட்டர் நிறுவ ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் இருப்பதால், தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் மாணவர்கள் வசதிக்காக ஜெனரேட்டர் பொருத்தப்படும் என, கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் முதல் அறிவிப்பாக மேயர் கூறியிருந்தார்.
இதன்படி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 70 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், முதல்கட்டமாக 21 பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வாங்க, 1.36 கோடி ரூபாய்க்கு மாநகராட்சி ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில், அண்ணாநகர் மண்டலத்தில் 7 பள்ளிகள், திரு.வி.க., நகர் மண்டலத்தில் 11 பள்ளிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன.
10 கி.வா., முதல் 62.5 கி.வா., வரை திறன் கொண்ட ஜெனரேட்டர்கள், பள்ளிகளின் வசதிக்கு ஏற்ப வாங்கப்பட உள்ளன.
மற்ற பள்ளிகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெனரேட்டர்கள் வாங்கி நிறுவப்படும் என்று மாநகராட்சி மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.