தினகரன் 02.12.2010
ரூ1 கோடியில் நகராட்சி அலுவலகம் திறக்க வரும் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு பேரணாம்பட்டு நகராட்சி தீர்மானம்
பேரணாம்பட்டு, டிச.2: ரூ1 கோடியில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தை திறந்து வைக்க வரும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று பேரணாம்பட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரணாம்பட்டு நகராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் ஆலியார்ஜுபேர் அஹமத் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் பெண்ணரசி சிவசத்தியமூர்த்தி, கவுன்சிலர்கள் அப்துல்ஜமீல், ஜானகிபீட்டர், முஹமத்ஆகில், துரைமுருகன், சித்திக், மீராஞ்சிசலீம், சாம்ராஜ், மனோஜோசப், ரூபி நீலமேகன், ஜாகிதாஅஹமத், ஜுபேர், லாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரூ1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேரணாம்பட்டு நகராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை விரைவில் திறந்து வைக்க பேரணாம்பட்டிற்கு வருகை தரும் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சி சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பளிப்பது என்று தீர்மானிக்கப் பட்டது.
மேலும் புதியதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்தில் கணினி அறைக்கு பேரணாம்பட்டை சேர்ந்த மறைந்த கல்வியாளர் மரீத் ஹாஜி முஹமத் இஸ்மாயில் பெயரை சூட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.