தினகரன் 08.11.2010
ரூ4.95 கோடியில் கட்டப்படுகிறது மாநகராட்சி புதிய கட்டிடம் 85 சதவீத பணிகள் முடிந்தது முதல்வர் வரும்போது திறக்க ஏற்பாடு
வேலூர்,நவ.8: வேலூர் மாநகராட்சிக்கு கன்டோன்மென்ட் ரயில்நிலையம் அருகே புதிய அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ4 கோடியே 95 லட்சம் மதிப்பில் வாகனங்கள் நிறுத்த கீழ் தளம் மற்றும் தரைதளம், முதல்மாடி, 2வது மாடி என பிரமாண்டமான அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதுவரையிலும் 85 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டது. கட்டிடத்தின் உள்ளே டைல்ஸ் மற்றும் அறை கதவுகள் பொருத்தப்பட்டு விட்டன. குடிநீர் இணைப்பு, மின்சார வசதியும் செய்யப்பட்டு, இப்போது ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகரமன்ற கூடம் மற்றும் அலுவலகங்களில் மேஜை, நாற்காலிகள் பொருத்தப்பட வேண்டியுள்ளது. லிப்ட் அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் கட்டிடத்தின் முன்பு நீரூற்றுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டி உள்ளது.
இம்மாத இறுதியில் காட்பாடி அருகே சேர்க்காட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கான புதிய கட்டிடத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அப்போது புதிய மாநகராட்சி கட்டிடத்தையும் திறக்கும் வகையில் மீதியுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.