தினகரன் 26.08.2010
அண்ணா நகர் ஆர்ச், நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் ரூ120கோடியில் 2 மேம்பாலம்; ஒரு சுரங்கப் பாலம் ? வி.சி.மணி
சென்னை, ஆக. 26: நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் அண்ணா நகர் ஆர்ச் சந்திப்பு பகுதியில் ரூ20 கோடி செலவில் இரண்டு மேம்பாலம், ஒரு சுரங்கப்பாலம் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் சிக்னலில் சிக்காமல் வாகனங்கள் செல்ல முடியும்.
சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்து இல்லாத நிலையை உருவாக்கவும் நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது.
சென்னை பிரதான சாலையாக திகழும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (ஈ.வெ.ரா நெடுஞ்சாலை), அண்ணா நகரின் நுழைவு பகுதியாக இருக்கும் அண்ணா நகர் ஆர்ச் சந்திப்பிலும், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை அண்ணா நகருடன் இணைக்கும் முக்கிய சாலைகளான நெல்சன் மாணிக்கம் சாலை & பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் பல ஆயிரம் வாகனங்கள் தினசரி செல்கின்றன. அதனால் நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு, அண்ணா நகர் ஆர்ச் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னலே இல்லாமல் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில், அதிகநவீன தொழில்நுட்பத்துடன் சுரங்கப்பாதை உள்ளடக்கிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பெங்களூரைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து சிக்னலே இல்லாத மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான வரைபடத்தை தயாரித்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறையிடம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின்படி நெல்சன் மாணிக்கம் மற்றும் அண்ணா நகர் ஆர்ச் சந்திப்புகளில் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல வசதியாக இரண்டு மேம்பாலங் களும், ஒரு சுரங்க பாலமும் கட்டப்பட உள்ளது. முதல் மேம்பாலம் நெல்சன் மாணிக்கம் சாலையில் தொடங்கி, தற்போது சிக்னல் உள்ள (ஈவெரா நெடுஞ்சாலை) பகுதியையும் தாண்டி, அண்ணா ஆர்ச் பகுதியில் வந்து இறங்கும். இது ஒரு வழி பாதையாக இருக்கும். நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள் இந்தப் பாலத்தில் செல்லலாம்.
2வது மேம்பாலம் நெல்சன் மாணிக்கம் சாலை, ஈவெரா நெடுஞ்சாலை சிக்னல் அருகில் இருந்து தொடங்கி, அண்ணா நகர் ஆர்ச் சிக்னல் பகுதிக்கு மேலே சென்று அண்ணாநகர் 3வது அவின்யூ சாலையில் முடியும். இதே பாலத்தில், நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து வலது பக்கம் திரும்பி சென்ட்ரல் செல்பவர்களும் ஏறிச் செல்லலாம். இவர்களுக்கு வசதியாக இந்த பாலத்தின் மத்தியில், அதாவது ஆர்ச் தாண்டியதும், ஒரு தனி பாதை மூலிகை பண்ணை வழியாக, கீழே இறங்கி பூந்தமல்லி சாலையில் தரை பகுதிக்கு வந்து இணைக்கப்படும்.
மேலும் நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து வருகிறவர்கள் முதல் பாலத்துக்கு கீழே வந்து, 2வது பாலத்தில் ஏறி, அண்ணா நகர் செல்லலாம். ஈவெரா நெடுஞ்சாலையில் வருகிறவர்களும் 2வது பாலத்தில் ஏறி அண்ணா நகர் செல்லலாம். கீழே இப்போதுள்ள சாலையில், கோயம்பேடு செல்கிறவர்கள் நேராக சிக்னலில் நிற்காமல் போகலாம்; வரலாம்.
3வது பாலம் சுரங்க பாலமாக கட்டப்பட உள்ளது. இந்த பாலம் அண்ணா நகர் 3வது அவின்யூவில் இருந்து துவங்கி அண்ணா நகர் ஆர்ச் சிக்னல் பகுதி வழியாக திரும்பி, கோயம்பேடு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தரை பாதையில் இணைக்கப்படும். இந்த சுரங்க பாலத்தில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள் மட்டுமே செல்ல முடியும்.
இந்த பகுதியில் இரண்டு மேம்பாலம், ஒரு சுரங்க பாலம் அமைந்தாலும், கோயம்பேடு & சென்ட்ரல், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள் வழக்கமான பாதையில் செல்லலாம். இதில் எந்த மாற்றமும் இருக்காது. மூன்று பாலங்களும் 600 மீட்டர் முதல் 700 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.
ரூ120 கோடியில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பாலம் அமைப்பதற்கான வரை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்குவதற்கான டெண்டர் விடப்படும். இந்த பாலம் பணிகள் முடிந்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலையில் எல்லா வாகனங்களும் தங்குதடையின்றி செல்ல முடியும்.