தினமணி 26.04.2010
வியாசர்பாடியில் மேம்பாலப் பணி விரைவில் தொடங்கும்: மேயர்
சென்னை, ஏப். 25: வியாசர்பாடியில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் 2-வது வார்டு பயனாளிகளுக்கு இலவச கலர் டி.வி. வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு டி.வி.களை வழங்கிய மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:
சென்னை மாநகரில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 976 இலவச கலர் டி.வி.கள் வழங்க திட்டமிடப்பட்டு, இதுவரை 6 லட்சத்து 31 ஆயிரத்து 569 டி.வி.கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கு இன்னும் ஒரு மாத காலத்தில் டி.வி. கிடைக்கும்.வடசென்னையில் ரூ. 24.80 கோடியில் கேப்டன் காட்டன் கால்வாய் மேம்படுத்தும் பணி, ரூ. 23.75 கோடியில் கொடுங்கையூர் கால்வாய் மேம்படுத்தும் பணி மற்றும் ரூ. 11.10 கோடியில் 39 தெருக்களில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.வியாசர்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 60 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து கணேச புரத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கப்படும் என்றார்.