தினமணி 17.02.2010
உள் கட்டமைப்புக்கு தமிழக அரசு ரூ. 24 கோடி நிதி ஒதுக்கீடு
பேராவூரணி,பிப்.16: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியின் உள் கட்டமைப்பு வசதிக்கு தமிழக அரசால் ரூ. 24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராவூரணி பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார் திங்கள்கிழமை கூறியது:
பேராவூரணி பேரூராட்சியில் குடிநீர் மேம்பாடு, சுகாதாரம், மழை நீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை,போக்குவரத்து, தெரு விளக்கு, குடிசை மேம்பாடு மற்றும் நகர்புற வறுமைக் குறைப்புத் திட்டங்கள், சமுதாய உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் ரூ. 24 கோடி 90 சத மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 15 ஆண்டுகளில் பணிகள் முடிவுறும் நிலையைப் பொறுத்து, தவணை முறையில் நிதி வழங்கப்படும். இந்த நிதியில் 10 சத பங்குத்தொகையை பேரூராட்சி நிர்வாகம் 15 ஆண்டுகளில் செலுத்த வேண்டும்.
பேராவூரணி பேரூராட்சியை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், நிதியைப் பெற ஆலோசனை வழங்கி, முயற்சி மேற்கொண்ட மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்திற்கும் நன்றி என்றார் அவர்.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் ப. ஜனார்த்தனன், அலுவலர் ஷேஷாத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.