தினகரன் 04.02.2010
மாட்டுத்தாவணியில் அமைய உள்ள புதிய சென்ட்ரல் மார்க்கெட் இம்மாத இறுதியில் தயாராகும்
மதுரை : மதுரை மாட்டுத் தாவணியில் புதிதாக அமை யும் சென்ட்ரல் மார்க்கெட் இம்மாத இறுதியில் தயாராகி விடும். தற்போதுள்ள மார்க்கெட் காலியானதும் அந்த இடத்தில் நவீன வடி விலான வாகன நிறுத்துமிடம் உருவாகிறது.
மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழி, ஆணை யாளர் செபாஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரை மாட்டுத்தாவணியில் கட்டப்பட்டு வரும் புதிய சென்ட்ரல் மார்க்கெட் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு தயாராகிவிடும். மார்க்கெட் டின் உள்பகுதியில் சாலை மற்றும் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மார்க்கெட்டின் நுழைவாயில் லேக்ரோடு பகுதியில் அமைக்கப்படுகிறது. இதனால், மேலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. புதிய மார்க்கெட் கடைகளுக்கு மாநகராட்சி குறைத்து நிர்ணயித்துள்ள தொகை செலுத்த வியாபாரிகள் பெரும்பாலும் ஒப்புதல் அளித்துவிட்டனர்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஏற்பாட்டின்படி 11 இடங்களில் டெல்லியைப் போல இலவச நவீனக் கழிப்பிடங்கள் திறந்துவைக்கப்பட்டன. அதன் செயல்பாட்டை நேரில் சென்று ஆய்வு செய்வோம். இந்தக் கழிப்பறைகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள நவீன கழிப்பிடங்கள் 24 மணி நேரமும் செயல்படும். மற்ற இடங்களில் உள்ள கழிப்பிடங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
ஆம்னி பஸ்களை மாட்டுத் தாவணிக்கு மாற்றும் திட்டம் பரிசீலிக்கப்படும். மதுரை நகரைக் குடிசை இல்லாத நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசின் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் 22 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதில் இதுவரை நகர்ப்புறப் பகுதிகளில் பட்டா உள்ள அல்லது அரசுப் புறம்போக்கு இடங்களில் இருக்கும் குடிசைகளை மாற்றி காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பட்டா உள்ள குடிசை களை மாற்றி கட்டிக் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.