தினகரன் 13.01.2010
வரி வசூலிக்க புதிய வாகனம்
சென்னை : மதுரை, திருநெல்வேலி, சென்னையில் உள்ள வணிக வரித் துறை அதிகாரிகளின் அலுவலக பணிகளுக்காக, ரூ.64 லட்சத்தில் 15 புதிய வாகனங்களை அரசு வழங்கியுள்ளது.
வாகனங்களின் சாவிகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் வணிக வரித் துறை அமைச்சர் உபயதுல்லா, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, வணிகவரித் துறை செயலர் ஜேக்கப், வணிகவரித் துறை ஆணையர் ஜெயக்கொடி பங்கேற்றனர்.
ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்ற 303 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணைகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆதி திராவிடர் நலத்துறை செயலர் விஸ்வநாத் ஷெகாவ்கர், ஆணையர் சிவசங்கரன், பழங்குடியினர் துறை இயக்குனர் ரவீந்திரன் உடன் இருந்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 46 பேர் அருந்ததிய இனத்தவர்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக 1,367 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்கள் கல்விக்காக ரூ.671.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.